புலிகள் சேனை கொடிகள் ஏற்றும் தலைவன் பாதை விடியல் காட்டும்.
ஊரெங்கும் உயர்ந்துள்ள கற்பக விருட்சங்களே!
கண் திறவுங்கள்.
வீசும் காற்றுக்கெல்லாம் தலையசைத்து
தாளம் போடுவதை நிறுத்தி `சக்தி` பெறுக.
உரம் பெற்ற வைர உடல்வாகும்,
குனியோமெனும் வரலாறும்
உமக்குண்டு.
பகைவனுக்கிதனை உணரச்செய்வீர்.
கோடி பனைகள் நிமிர்ந்த தேசமிது.
குலையாதெம் மனவுறுதியென
வடலிகளும் வரிசை கொள்க.
புயலுக்கு அசையாத என் பனைகளே!
தமிழர் தேசத்துத் தருக்களே!
“கருக்குவாளேந்திக்” களத்திலிறங்குக.
ஊர் புகுந்த பகையே!
உனக்கு ஒன்றுரைப்போம் கேள்.
வேட்டை நாயென விரட்டி,
சுடுகுழல் வேலியாய்ச் சுற்றி வளைத்து
கூட்டுக்குள்ளே இழுத்துச் சென்றாய்.
ஒப்புதலின்றி உள்ளே கொண்டு சென்றாயே!
அவர்கள் அப்பாவிகளல்லர்…
அமுக்க வெடிகள்.
கோரப்பற்களின் குரூரம் அறியாது
உன் பாதத்தில் வந்து பணிந்தனராம் சிலர்.
இவர்களுன் விசுவாசிகளல்லர்….
அடிவருடிகள்.
சாகும் வரை சிம்மாசனம் தனக்கென்றிருப்போர்.
ஆங்கிலேயர் காலத்திலிருந்தே அடங்கிப்போகும்
பயிற்சியெடுத்த பரம்பரையினர்.
நீ நச்சு விளகென்பது
அந்த விட்டில்களுக்கு விளங்கவில்லை.
வெண்தாமரை மலர்கள்
ஆரியகுளத்திலும் பூத்துளதாமே.
நீளக் கயிற்றில் கால்களைக் கட்டி
ஆடவிட்டுள்ளாய்.
பெருவாழ்வு கைவரப் பெற்றதாய்
எம்மிற் சிலர் பொச்சடிக்கின்றனர்.
உன்னை
நச்சுக் பற்கள் கழற்றிய நாகபாம்பென நம்பி,
எம்மிற் சிலர்
தொட்டு விளையாடவும் தொடங்கி விட்டனராம்.
“ஆமிக்காரன் நல்லவன்”
“இப்படி இருப்பானெனத் தெரிந்தால்
எப்போதோ வந்திருக்கலாம்”,
“அன்பாக பழகினால்
அவனும் மனிதன் தானே”
காற்றோடு காற்றாகக் கலந்து
இந்தக் கதைகளும் எழுந்து வருகின்றன.
விடுதலையின் விலாசமறியாது
இன்னும் சிலர் எம்முள்ளே இருக்கலாம்.
வீட்டுக்குத் திரும்புவதே விடுதலையென்று
வந்துன் வாசலில் வரிசையில் நிற்கலாம்.
புரதான வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென,
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி,
`புத்திஜீவிகள்` சிலர் உன்னைப்பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியை நீயேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலுபேர் இல்லாமலா போய்விடும்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
“வானம் எம் வச”மென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கே காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா!
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீசவும் இவர்களே தகுதியானவர்கள்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்.
பழைய பேப்பர் வழங்குக.
அவர்கள் பாடநூல் அச்சிடட்டும்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு…
ஆட்களில்லையென்ற கவலையுனக்கழிந்தது.
பட்டிமன்றம்
கவியரங்கு,
சொற்பொழிவு,
அரங்கேற்றம்,
திருவிழா காலத்துத் திருவூஞ்சற் பாட்டு.
எல்லாவற்றுக்கும் பொருத்தமானவர்கள் உள்ளே வந்துளர்.
ரோச நரம்பை அறுத்தெறிந்துவிட்டு
பேசவரக் கூடியவர்கள்.
பகையுடன் இனி உறவில்லையென்று பாடியவர்களே!
உமக்கு என்ன நடந்தது?
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்?
பொழுதெல்லாம் பொய்யாக இருந்துவிட்டா
வலிகாமம் புகுந்தீர்?
உள்ளே செல்ல வரிசையில் நின்ற சிலர்
வெளியே வந்தவரைப் பார்த்து விசிலடித்தார்களாம்.
“பாட்டுக் கேட்கலாம்,
படம் பார்க்கலாம்.
தடுப்பாரின்றித் தண்ணியடிக்கலாம்…”
என்றபடி சிலர் சென்றாராம்.
வெட்கம் கெட்டதுகளுக்கு எப்படி விடுதலை விளங்கும்.
பற்றியெரிந்த நெருப்பிற் குளித்து,
சுற்றி வளைப்பில் சிக்குண்டு,
வன்னிக்கு வரும் வழிகள் அடையுண்டு,
விழிசிந்தி அழுதபடி
உள்ளே சென்றவரே அதிகம்.
வடமராட்சியிலிருந்து ஓடிவந்து,
கொடிகாமத்தில் வரிசையில் நின்று
உள்ளே போனதுகளும் உண்டு.
புலிகளின் கதை முடிந்து போனதென்றா
பகைவனோடு வலிகாமம் போனீர்?
எனக்கும்,
என் பிள்ளைக்கும்,
முடியுமானால் உறவுக்கும்,
என்பது வயது வரை எதுவும் நடக்காமல்
காலம் கழிந்தால் அதுவே போதும்.
விடுதலையென்ன விடுதலை.
யாருக்கது வேண்டும்?
பாலும், பழஞ்சோறும், பாணும் பருப்புமிவை
நாலும் கிடைக்குமெனில் நமக்கதுவே போதும்.
என்றெணிப் போனவருக்கு
ஒன்றுரைப்போம்.
அடிமைத்தனத்தை அற்புதமென்று
பதிகம் பாடிப் பல்லக்கில் சுமக்கவா
அதிகம் விரும்பினீர்?
அடிக்கடி நாக்கு வழித்துக் கொள்ளுங்கள்.
உங்களில் உப்பு உறைக்கட்டும்.
விரைவில் எம் ஊருள் வருவோம்.
இரவு, இரவாக நீள்வதில்லையே.
காலைப்பொழுதைக் கைகளில் தந்துவிட்டு
இரவு கரைந்து கொள்ளும்.
தமிழர் தேசம் பணிந்திடாது.
தலைவன் இருக்கத் தளர்ந்திடாது.
என நினைத்து எழுக துணிந்து.
எதிரி சேனை கொடிகளேற்றும்.
தலைவன் பாதை விடியல் காட்டும்.
- வைகாசி 1996 -


